Monday, August 9, 2010

பொன்முடி


டாக்டர் தெய்வ சிகாமணி என்கிற பொன்முடி, எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது
நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்), பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி!

தமிழ்நாட்டு அமைச்சரவையில் மெத்தப் படித்த மேதாவி. பெயரைவிட நீளமான இந்தப் பட்டங்களை போட்டுத்தான் ஆரம்ப காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். இன்று, எந்த டி.வி-யில், எந்த சீரியல், எத்தனை மணிக்கு வருகிறது. அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை வரிசையாகச் சொல்லும் அளவுக்கு பொன்முடியின் கலை ஆர்வம் அதிகமாகிவிட் டதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.

அமைச்சர் பொன்முடியுடன் பிறந்தவர்கள் தியாகராஜன், நடன சிகாமணி, ராதா சிகாமணி, கோபி சிகாமணி, கார்த்திக் சிகாமணி, வைஜெந்தி மாலா, மல்லிகா என எட்டுப் பேர். சமணத் தீர்த்தங் கர்களில் முக்கியமான ரிஷபநாதர் பெயர் சிகாமணி. இவரது குடும்பத்து மூதாதையருக்குச் சமண மதத்துடன் தொடர்பு இருந்ததால், இத்தனை சிகாமணிகள். அப்பா கந்தசாமி, சித்தலிங்கம் மடம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அம்மா மரகதமும் ஆசிரியைதான். வரும் ஆகஸ்ட் மாதம், 60 வயதில் அடியெடுத்துவைக்கிறார் பொன்முடி. ஆனால், துள்ளல் நடை இன்னும் இளமையாகத்தான் வைத்திருக்கிறது.

17 ஆண்டு காலம் கல்லூரி ஆசிரியப் பணியில் இருந் தவர் பொன்முடி. விழுப்புரம் கலைக் கல்லூரியில் பணியில் இருந்தபோது திராவிடர் கழக மேடைகளில் இவரை அதிகம் பார்க்கலாம். பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். வழக்காடு மன்றங்களில் நாத்திகம் பேசுவார். இன்று மேல்மருவத்தூர் அம்மா அருகில் நின்று, "பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணியின் மூலம் செய்து வருகிறார்" என்று பேசும் அளவுக்குக் கொள்கை வெளுத்திருக்கிறது.

'பெரும்பான்மை சமூகமான வன்னியர் கோட்டையில் மாவட்டச்செய லாளராகவும், தொடர்ச்சியாக மூன்று முறை அமைச்சராகவும் பொன்முடி ஆனதற்குப் பின்னணி, அவரது துணிச்சலும் யாருக்கும் பயப்படாமல் நினைத்ததைச் செய்யும் குணமும்தான் காரணம்' என்று தி.மு.க. வட்டாரம் சொல்கிறது.

பொன்முடி தி.மு.க-வுக்குள் தன்னை இணைத்துக்கொண்டபோது, ஒன்றுபட்ட தென் ஆற்காடு மாவட்டத்தில் செல்வாக்குப் படைத்த மனிதராக உலா வந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். "தலைவரே, ஒரு நிமிஷம் நில்லுங்க. நான் சொல்றதைக் கேட்டுட்டுப் போங்க" என்று கார் ஏறப் போன கருணாநிதியை இடைமறித்து சொல்லக்கூடிய துணிச்சல்காரர் அவர். அதுவே, அவருக்கு வினையானது. மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தார் கருணாநிதி. 'மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியைத் தரப்போகிறேன்' என்று தேவையான சூத்திரத்தை கருணாநிதி கையில் எடுத்தபோது தென்பட்டார் பொன்முடி. ஏராளமாகப் படித்திருக்கிறார் என்பது கூடுதல் தகுதியானது. சுகாதாரத் துறை தரப்பட்டது.



1989-ல் கட்சிக்குள் தனக்கான ஆட்களை இளைஞர் அணியில் பொறுப்பு கொடுத்து உள்ளே நுழைக்கும் காரியங்களில் ஸ்டாலின் இறங்கினார். பொன்முடியிடம் ஆள் கேட்டார் ஸ்டாலின். ஆதி சங்கரை உள்ளே நுழைத்தார் பொன்முடி. செஞ்சியாரை நேருக்கு நேராக முட்டி, தன் அஞ்சாமையை அறிவித்தார் பொன்முடி. செஞ்சியாரின் கோபம் தலைக்கேறி... வைகோவுடன் கை கோத்தார். செஞ்சியாரின் விலகல்... பொன்முடி பூத்துக் கிளம்பக் காரணம் ஆனது. ஸ்டாலினின் நெருக்கம்... கருணாநிதியுடன் இணக்கம்... இரண்டும் தலைமை வரிசையில் உட்காரவைத்தன. 'சத்யராஜ்' சிரிப்பு சிரித்தபடி வளைய வருவார் பொன்முடி. 'கலைஞருக்கு ஒரு பேராசிரியர் அன்பழகன். தளபதிக்கு ஒரு பேராசிரியர் பொன்முடி' என்று விழுப்புரம் ஆட்கள் வீரப் பட்டம் தந்தனர்.

சொந்தக் கட்சியில் மட்டுமல்ல; தி.மு.க. எதிர் அணியில் இருக்கும்போதும் சட்டசபையில் எதிர்ப்புச் சத்தம் பொன்முடியிடம் இருந்துதான் கிளம்பும். அன்பழகனும் துரைமுருகனும் பேசத் தயங்கும்போது, பொன்முடியும் பரிதியும்தான் அடங்காப் பிள்ளைகளாக எதிர் அம்பு வீசுவார்கள். பழைய வரலாற்று ஞாபகங்கள் தொடங்கி... அரசாங்க அறிவிப்புகள் வரை புள்ளிவிவரங்களுடன் பேசக்கூடிய மனிதர். இது கருணாநிதியிடம் அவருக்கு இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவரை மீறி வட மாவட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது.

தனக்கு உயர் கல்வித் துறையைக் கொடுத்தபோது, 'என் தகுதிக்கு கல்வித் துறையை மொத்தமாகத் தராமல், அதை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி யைக் கொடுப்பதா?' என்று கோபம். 'கொஞ்ச காலம் பொறுய்யா' என்று சமாதானப்படுத்தினார் கருணாநிதி. துரைமுருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அவரிடம் இருந்த பொதுப் பணித் துறை இவருக்குக் கூடுதல் பொறுப்பாகத் தரப்பட்டது. ஆனால், அப்போதும் பொன்முடியை 'சுதந்திரமாக'ச் செயல்படவிடாமல் துரைமுருகன் தடுப்பதாக வதந்திகள் கோட்டையில் சுழன்றன. அதுவரை துரைமுருகனின் ஜோக் அனைத்துக்கும் சிரித்து வந்த பொன்முடி, முதல் தடவையாக முறைக்க ஆரம்பித் தார். முழு குணம் அடைவதற்கு முன்னால் எழுந்து வந்து துறை யைக் கைப்பற்றிக்கொண்டார் அவர். 'எனக்கு வேறு ஏதாவது ஒரு துறையை நிச்சயம் கொடுத் தாக வேண்டும்' என்று பொன் முடி பிடிவாதம் பிடிக்க... அடுத்தவரிடம் இருந்து எதையும் எடுக்க முடியாத கருணாநிதி, தன் வசம் இருந்த கனிம வளத்தைத் தாரைவார்த்தார். இதை வாங்கிக் கொடுக்க ஸ்டாலினைவிட அதிகத் தூண்டுதலாக இருந்தது அழகிரிதான் என்பதால், அவர் மீது இவருக்கு நெருக்கம் அதிகம் ஆனது. 'ஸ்டாலினின் முக்கியத் தூணை மதுரைஇழுத்து விட்டது' என்று வர்ணித்தனர்.



சக மந்திரிகளில் எ.வ.வேலு மட்டும்தான் பொன்முடியுடன் முழுமையாகச் சிரித்துப் பழகி, பேசிக் களித்து வருபவர். மற்றவர்கள் பொன்முடியிடம் ஏதாவது பரிந்துரை என்றாலே பயந்து நடுங்குகிறார்கள்.

விழுப்புரத்தைச் சுற்றி வந்தால், சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை கப்பிக்காம்புலியூரில் இருக்கிறது சிகா அறக்கட்டளை. ஆரம்பத்தில் இங்கு ரெசிடென்ஷியல் ஸ்கூல் மட்டும் தொடங்கப்பட்டது. சமீபத்தில் கலை அறிவியல் கல்லூரியும்,ஆசி ரியர் பயிற்சிக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சூரியா அறக்கட்டளை பெயரில் பொறி யியல் கல்லூரி, பாலிடெக்னிக், நிர்வாகவியல் கல்லூரி எனப் பிரமாண்டமான கட்டடங்கள் எழுந்துவருகின்றன. பெருமுக்கல் என்ற இடத்தில் ஜல்லி உடைக்கும் நிறுவனம், காங்கிரீட் தயாரிப்பு நிறுவனம் வளர்ந்து வருகிறது. கடலூரில் ஹீரோ ஹோண்டா விற்பனையகம் உள் ளது. சிமென்ட் வர்த்தகமும் உண்டு. கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்தில் இருந்து வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். இன்று விழுப்புரத்திலும், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகரிலும் வீடுகள் இருக் கின்றன. அந்த வீட்டு நிலம் தொடர்பான வழக்கும் நிலு வையில் உள்ளது. சென்னையில் எழும் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் இவர்தான் என்று அப்பகுதியினர் சொல்கிறார் கள்.

பொன்முடிக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், பொன் கௌதம சிகாமணி. அடுத்தவர், பொன் அசோக் சிகாமணி. இருவருமே டாக்டர்கள். கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தைப் பார்வையிடும் குஷ்புவின் மடியில் அமர்ந்திருந்த சின்னப் பெண் பெயர் கயல், கௌதம சிகாமணியின் மகள். கௌதமன் டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். வட மாவட்டத்தில் கட்சியின் முக்கியப் பிரமுகராகவும் வளர்ந்து வருகிறார். தளபதி நற் பணி மன்றம் ஆரம்பித்து இருக் கிறார். அழகிரி மன்றங்களுக்குத் தடை போட்ட தலைமை, இதைக் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம்தான். இவரது பெயர் இல்லாமல் மாவட்டத்தில் விளம்பரங்கள் செய்ய முடியாது. வேண்டியவர்கள், சாதிக்காரர்கள் மட்டுமே அமைச்சரால் வளர்த்துவிடப்படுவதாகக் கட்சிக்குள் பொருமல் கேட்கிறது. இது தொடர்பான எத்தனையோ புகார்கள் அறிவாலயம் வாசலைத் தட்டி இருக்கின்றன. ஆனால், கருணாநிதியின் கவனத்துக்குப் போனதாகத்தான் தெரிய வில்லை.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தது, கலைக் கல்லூரிகளில் ஷிஃப்ட் முறையைக் கொண்டுவந்தது, கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை, முதுகலைப் பட்டம் வரை கல்விக் கட்டணம் ரத்து போன்றவை பொன்முடி காலத்துச் சாதனைகளாகச் சொல்லப்படும். நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கிராமப்புற மாணவர்கள் 54 ஆயிரம் பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது முக்கியச் சாதனை. 16 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு செக் வைத்தபோது, 'அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்' என்று துணிச்சலாகக் குரல் கொடுத்தார் பொன்முடி. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலையும், பல்கலைக்கழக மானியக் குழுவையும் இணைத்து தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்தபோது, 'இதனால் உயர் கல்வியில் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறையும்' என்று எதிர்த்தார். ஆனால், உயர் கல்வி என்பது இன்று வைரம், வைடூரியத்தைவிட விலைமதிப்பானதாக மாறிக்கொண்டு இருப்பதை இந்த அரசு உணர்ந்ததாகத்தெரிய வில்லை.

பொறியியல் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம்கிடைத் தால், 32 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீடாக இருந்தால் 62 ஆயிரத்து 500 ரூபாயும்தான் வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு உத்தரவு. இது மெகா பொய் என்பதை பொறியியல் படிக்கும் மாணவனின் குடும்பங்கள் அறியும். தமிழகத்தில் இருக்கும் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் ஆறு லட்சம் வரைக்கும் சில பாடங்களை பெற தர வேண்டியுள்ளது. இதை உயர் கல்வித் துறை கண்டுகொள்வதே இல்லை.

"உயர் கல்வியைக் குறைந்த செலவிலும் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையிலும் வழங்குவதன் மூலமே உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த முடியும்" என்று சட்டசபையில் பொன்முடி சொன்னார். ஆனால், நடைமுறையில் அதை அமல்படுத்த எதையும் செய்ததாகத் தெரியவில்லை. கல்வித் தந்தைகளின் பண பலத் துக்கு முன்னால் எந்தக் கல்விக் கொள்கையும் கரைந்துபோகும் என்பதற்கு பொன்முடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன?

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே பல்வேறு சர்ச்சைகளில் மாட்டினார்கள். 'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்றார் அமைச்சர். நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நல்லவரை நியமிக்கும் பொறுப்பு இருக்கிறதே? கவர்னர் மாளிகையில் அமைந்திருக்கும் 'மூவர் அணி' மன்னர் ஆட்சி மாதிரி கொழிப்பதை யாராலும் தடுக்க முடியவில்லையே? பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதும், கவுன்சிலிங் சீஸனும் மட்டுமே உயர் கல்வித் துறையின் வேலைகள் என்று யார் வரையறுத்தது?

விழுப்புரத்தில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசிய நினைவுப் பரிசை கருணாநிதிக்கு வழங்கினார் பொன்முடி. 'இதில் பெரியாரும் அண்ணாவும் இருக்கிறார்கள். இல்லையென்றால், கீழே தூக்கிப் போட்டிருப்பேன்' என்றார் கருணாநிதி. நம்மைவிட இன்னும் எவ்வளவோ அறிந்தவர் அவர்தானே!

No comments:

Post a Comment