Monday, August 9, 2010

கே.என்.நேரு


"பெரிய மீசை வைத்திருப்பவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது" - என்று சட்டமன்றத்தில் எகிறினார் நத்தம் விஸ்வநாதன். அவர் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அமைச்சர்!

"உங்களுக்கு மீசை வளரவில்லை என்றால், நானா பொறுப்பு?" என்று பதில் அளித்தார் கே.என்.நேரு. இப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர்!

அண்ணன் அமைதியாகப் பதில் அளித்தது பலருக்கும் ஆச்சர்யம். அது, அவரது ஒரிஜினல் முகம் அல்ல. சக மந்திரியாக இருந்தாலும், சாதாரணத் தொண்டராக இருந்தாலும், நேருவின் மீசை ஆளை மிரட்டும்... விரட்டும். அப்படி ஓர் ஆளுமைகொண்ட நேரு, ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை.

லால்குடி தொகுதிக்கு உட்பட்ட காணக்கிளிய நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. விவசாயக் குடும்பம். தேசம் அறிந்த தலைவரான ஜவஹர்லால் நேருவைப்போல வர வேண்டும் என்பதற்காக நேரு என்று பெயரைவைத்தார் அப்பா. பி.யூ.சி., வரை படித்த நேரு, அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியல் ஆசை வந்தது. அந்த நேரத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும் முடிவெடுத்து இருந்தார். புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்று... அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றிபெற்ற தேர்தல் அது. சுமார், 10 ஆண்டு காலம் முடங்கிக்கிடந்த கட்சி மீண்டும் செழிக்க ஆரம்பித்தது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து நகர்பாலிகா என்று ஏராளமான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திருப்பிவிட்ட காலமும் அதுதான்.

பிரதமரை திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பு நேருவுக்குக் கிடைத்தது. "உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத் திருக்கிறார்கள்" என்று சொல்லி, பிரத மரின் கவனத்தைக் கவர்ந்த நேரு, தன் யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்தல். எம்.எல்.ஏ. ஆசை துளிர்த்தது. அப்போது, திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் செல்வராஜ். (இன்றைய வனத் துறை அமைச்சர்). அவரே 'ஓனர்' என்று தீனதயாளன் ரெட்டியார் என்பவரை அழைப்பார். அந்த ரெட்டியாரை நேரு பிடித்தார். 'ஓனர்' சொன்னதற்குப் பிறகு மறுக்க முடியாது என்பதால், லால்குடி தொகுதியை நேருவுக்குத் தாரை வார்த்தார் செல்வராஜ். சொந்த செல்வாக்கும் சாதி வாக்காளர்களின் உதவியும் நேருவை வெல்லவைத்தது.

நல்ல காலம் நேருவுக்கு ஆரம்பித்தது. அமைச்சர் பதவியைப் பங்கிடும் சதுரங்கத்தில் சத்தம் இல்லாமல் நேரு நுழைகிறார். திருச்சி மாவட்டத்தில் செல்வாக்கான செல்வராஜ், முசிறி தொகுதியில் தோற்கிறார். அவருக்கு அடுத்ததாக செல்வாக்கான மலர்மன்னனுக்கு மந்திரி பதவி தரக் கூடாது என்று கருணாநிதியின் இளமைக் கால நண்பர் அன்பில் தர்மலிங்கம் தடுக்கிறார். அன்பில் பொய்யாமொழிக்குத் தரலாமா என்று யோசித்தால், முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் ஏற்கெனவே எகிறிக்கொண்டு இருந்தது. அப்படியானால்... என்று தேடியபோது, தெரிந்தவர் நேரு. மின் துறை அமைச்சராக நேரு இணைந்தார்.

வைகோ பிரியும்போது செல்வராஜும் மலர்மன்னனும் பிரிந்தார்கள். நேருவுக்குத் தடையாக இருந்த இரண்டு மலை முகடுகள் தகர்ந்தன. அன்பில் பொய்யாமொழியின் அகால மரணம்... அவர் தாண்டியாக வேண்டிய கடலை வற்றவைத்தது. 'நான் அடிமை அல்ல' என்று சொல்லும் ஒரே ஆளாக திருச்சி என்.சிவா மட்டும்தான் இருக்கிறார். அடுத்த இரண்டாம் கட்ட ஆட்களாக வலம் வரும் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் ஆகிய மூவரும், நேரு காரின் பின் இருக்கைத் தம்பிகளாக மாறினார்கள்.

அண்ணன் அழகிரியாக இருந்தாலும், தம்பி ஸ்டாலினாக இருந்தாலும், இருவருக்கும் நெருக்கமானவர் நேரு. இந்த இரட்டை நிலையை அழகிரி விரும்பவில்லை. எனவே, இப்போதைய மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியனை திருச்சியின் தளபதியாக ஆக்க விரும்புகிறார் அழகிரி.

நேரு என்றால் கருணாநிதிக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சிதான் திருச்சியில் திறக்கப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்'. திறப்பு விழா ரிப்பனை வெட்ட, கருண£நிதி கையில் தரப்பட்டது தங்கக் கத்தரிக்கோல். ஆனால், அது வெட்டவில்லை. இரும்புக் கத்தரிக்கோலைக் கேட்டு வாங்கினார் கருணாநிதி. அது வெட்டியது. "ஏழைகளுக்காகக் கட்டும் மாளிகையில் இரும்புக் கத்திரிக்கோல்தான் பயன்படுத்த வேண்டும்" என்றார் கருணாநிதி. அந்த அளவுக்குச் செல்வம் பெருகிய குடும்பமாக இன்றைக்கு நேரு வளர்ந்துவிட்டார். அவருக்கு இரண்டு கைகளாக இருப்பது அவரது தம்பிகள் ராமஜெயமும் ரவிச்சந்திரனும்.

ராமஜெயம், திருச்சியில் இருக்கிறார். மணல் மற்றும் கிரானைட் தொழிலில் மத்தியத் தமிழ்நாட்டில் முக்கியப் பிரமுகர். இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் இவரை இணைத்து அறிக்கை மூலமாக ஜெயலலிதா குற்றம் சாட்டும் அளவுக்கு ராமஜெயத்தின் வளர்ச்சி இருந்தது. கனிமொழி, கருணாநிதிக்கு நெருக்கமானவராகவும் கட்சி வட்டாரம் இவரைச் சொல்கிறது. பெரம்பலூர் எம்.பி. தொகுதியை ராமஜெயத்துக்கு வாங்கிக் கொடுக்க விரும்பினார். மருமகன் நெப்போலியன் மல்லுக்கு நின்றார். நெப்ஸ§க்கு கருணாநிதி வாய்ப்பு வழங்க, இன்னமும் அந்த மோதல் கனன்றுகொண்டே இருக்கிறது. தொழில், சம்பாத்தியம் என இருந்தாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது பதவி வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ராமஜெயம். அவரும் அவரது உறவினரான வினோத் என்பவரும்தான் நேருவின் கல்லாப் பெட்டிகள்.

அடுத்த தம்பி, என்.ரவிச்சந்திரனின் பெயரைவிட, அவர் நடத்தி வரும் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், பல்வேறு மாநகரங்களை வளைத்து வருகிறது. சுருக்கமாக, டி.வி.ஹெச். சிறு வீடுகள் கட்டித்தரும் சிறு நிறுவனமாக வளர்ந்த இது, சமீபத்தில் வாங்கியுள்ள இடங்கள் கோடிகளைத் தாண்டியவை. 'தி பிக்கஸ்ட் டீல்' என்று ஆங்கிலப் பத்திரிகைகளே வர்ணிக்கும் இடங்கள் இதன் வசமாகி உள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் 'தென்னிந்தியக் கட்டுமானச் சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறோம்' என்று அந்த நிறுவன அதிகாரி அறிவித்து இருக்கிறார். 750 மில்லியன் டாலர் என்பது எத்தனை கோடிகள் என்பதை உடன்பிறப்புகள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

"சேகரிப்பதில் மட்டுமல்ல; செலவழிப்பதிலும் நேரு தேர்ந்தவர். போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களில் பெரும்பாலானவை கட்சியினர் கொடுத்த பரிந்துரைப்படி செய்து கொடுத்ததால், அவரை நிர்வாகிகளாகிய நாங்கள் யாரும் குறை சொல்வது இல்லை" என்று பொறுப்பாளர் நற்சாட்சிப் பத்திரம் படிக்கிறார்.

ஆம், நேருவின் காலத்தில், ஓட்டுநர்களாக கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 8 ஆயிரத்து 372 பேரும், நடத்துநர்களாக 5 ஆயிரத்து 991 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். 'தி.மு.க. உறுப்பினர் கார்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் வேலை தரப்பட்டது. இதில் பணம் விளையாடியது' என்று கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள். புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்கப்பட்டன. "இதில் 5 ஆயிரம்தான் புதிய வழித்தடத்தில் ஓடுபவை. மற்ற பேருந்துகள் ஏற்கெனவே இருந்ததைக் கழித்துவிட்டு புதிதாக வாங்கப்பட்டவை" என்று சொல்லப்படுகிறது. 'இத்தனை பேருந்துகளை வாங்கி ஓட்டினாலும் இன்னமும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம்? கூடுதல் வருமானம் எல்லாம் பைபாஸ் வழியாக எங்கு போகிறது?' என்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்ப, 'விஸ்வநாதனுக்கு இதைப்பற்றிப் பேச அருகதை இல்லை. இந்த ஆட்சியில் பயணிகள் அதிகம். அதனால், வருவாயும் அதிகம். செலவுகளும் அதிகம்' என்று லாஜிக் சொன்னார் நேரு. இது புதிய பொருளாதாரத் தத்துவமாகவே இருந்தது.

"புதிய பேருந்துகளை இயக்கியது, சொகுசுப் பேருந்துகள் மற்றும் தாழ்தளப் பேருந்துகள் வாங்கியது, வேலைவாய்ப்பை அதிகரித்தது, காலி இடங்களை நிரப்பியதுபோன்ற காரணங்களால் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது" என்று நேரு காரணம் சொன்னாலும், சாதாரணமாக 10 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் முதலாளி ஆறு மாதங்களுக்குள் கொழிப்பதும், 19 ஆயிரம் பேருந்துகள் வைத்திருக்கும் நிறுவனம், நஷ்டக் கணக்கைக் காட்டிவருவதும் யதார்த்தத்தில் இடிக்கவே செய்கிறது.

மத்திய தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்த நாட்டில், ஒரு நாளைக்குச் சுமார் 11 கோடி ரூபாய் பணம் போக்குவரத்துத் துறைக்கு வசூல் ஆகிறதாம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்டணத்தை உயர்த்தவே இல்லை' என்று தி.மு.க. அரசு சொல்கிறது. ஆனால், பொதுமக்கள் சொல்வது, 'சாதாரண பஸ்களில் கட்டணத்தை ஏத்தலை. சொகுசு, தாழ்தளம்னு சொல்லி புதுப் புது பஸ்களை விடுறாங்க. அதனால், அதிகக் கட்டணத்தைக் கொடுத்துதான் நாங்க போக வேண்டி இருக்கு' என்கிறார்கள். பஸ் கட்டணத்தையும் உயர்த்தவில்லை. பணமும் அதிகமாகச் சேருகிறது என்பது நேரு பிளானாக இருக்கிறது. (சென்னையில் சாதாரணப் பேருந்துகள் - 856, எம் சர்வீஸ் - 506, எல்.எஸ்.எஸ். 735, எக்ஸ்பிரஸ் - 243, குளிர்சாதனம்கொண்டது - 10)

பொதுமக்களின் போக்குவரத்துக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றார். அதன் செயல்பாடுகள் வெளியில் தெரியவில்லை. போக்குவரத்துப் பணியாளர்களுக்குப் பயிற்சி அகாடமி ஆரம்பிக்கப்படும் என்றார். அதற்கான பணிகள் தொடரவில்லை. போலி லைசென்ஸ்களைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்டு கொண்டுவந்துவிட்டோம் என்று சொல்லி, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் கார்டு யாருக்கும் கிடைக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக, கருணாநிதி தன்னுடைய சாதனையாகச் சொல்வது, பேருந்துகளை நான்தான் அரசுடைமை ஆக்கினேன் என்பது. அவர் முதல் தடவை முதல்வராக வந்தபோது, டி.வி.எஸ்., எஸ்.ஆர்.வி.எஸ், ராமன் அண்ட் ராமன், சக்தி விலாஸ், ஏ.பி.டி. ஆகிய பெருமுதலாளிகளின் வசம் இருந்த வாகனங் களைப் பறித்து அரசுடைமை ஆக்கினார். ஆனால், இன்று தமிழ்நாட்டின் நிலைமை என்ன? கோயம் பேடுக்குப் போய்ப் பார்த்தாலே தெரியும். மெகா, மொடா பஸ்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனைமலை மாதிரி தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் எத்தனை பேருந்துகள் வைத்திருக்கின்றன? அரசு விரைவுப் பேருந்தாக ஓடுபவை 900-தான் என்கிறார்கள். ஆனால், தனியார் ஆம்னிகள் எத்தனை ஆயிரம் இருக்கும்? இவர்கள் நிர்ணயிக்கும் விலைகள், பண்டிகைக் காலங்களில் அவர்களாகவே ஏற்றிக்கொள்ளும் விலைகள்... இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் போக்குவரத்து அமைச்சருக்குத்தானே இருக்கிறது. ஆனால், தனியார் கம்பெனிகளுக்கு மறைமுக ஆதரவே மந்திரி ஆட்கள்தான் என்பதை யார் மறுக்க முடியும்?

போக்குவரத்துத் துறையைப் பொதுமக்கள் துறையாக மாற்றியாக வேண்டும் என்ற கவலைகளைவிட, அழகிரி - ஸ்டாலின் ஆகிய இரட்டைக் குதிரைகளைத் திருப்திப்படுத்த முடியாமல் நேரு திணறிவருவதுதான் அவரது முகத்தில் அதிகமாகத் தெரிகிறது. கவலையை மறக்க அவர் கண்டுபிடித்திருக்கும் மாற்று வழி விவசாயம்தான். சொந்த ஊரில் இருந்தால் அதிகாலையிலேயே நிலத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவார். தன்னை மறந்து நேரத்தைக் கழிப்பார். இந்த அரசியல்வாதிகளைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா!

No comments:

Post a Comment